search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தமிழக வாலிபர்"

    • கொடிய விஷம் கொண்ட 20 ராஜநாக பாம்பு குட்டிகள் உள்பட 70-க்கும் மேற்பட்ட பாம்புகள் உயிரோடு இருந்தது.
    • பயணி சூட்கேசில் விஷ பாம்புகள் கடத்தி வரப்பட்டதால் விமான நிலையமே பரபரப்பாக காணப்பட்டது.

    பெங்களூரு:

    கர்நாடக மாநிலம் பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் பயணிகளின் உடைமைகளை சோதனை செய்து கொண்டிருந்தனர்.

    அப்போது ஹாங்காங்கில் இருந்து இரவு 10.30 மணிக்கு பெங்களூரு விமான நிலையத்திற்கு ஒரு விமானம் வந்தது. விமானத்தில் இருந்து இறங்கிய பயணிகள் டெர்மினல் 1 வழியாக வந்து கொண்டிருந்தனர். அவர்களின் உடைமைகளை சுங்க இலாகா அதிகாரிகள் சோதனை செய்தனர்.

    அப்போது ஒரு வாலிபர் சுட்கேசுடன் வந்தார். அவரை பார்த்ததும் சந்தேகம் அடைந்த சுங்க இலாகா அதிகாரிகள் அவரை அழைத்து விசாரித்தனர். அப்போது அவர் தமிழகத்தை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர் கொண்டு வந்த சூட்கேசை திறந்து பார்த்து சோதனை நடத்தினர்.

    அப்போது அதில் கொடிய விஷம் கொண்ட 20 ராஜநாக பாம்பு குட்டிகள் உள்பட 70-க்கும் மேற்பட்ட பாம்புகள் உயிரோடு இருந்தது. மேலும் ஒவ்வொரு பாம்பையும் சிறிய சிறிய பிளாஸ்டிக் டப்பாக்களில் அடைத்து வைத்து இருந்ததும் தெரிய வந்தது. மேலும் அந்த சூட்கேசில் இறந்த நிலையில் 6 குட்டி குரங்குகளும் இருந்தது. இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த சுங்க இலாகா துறையினர் அந்த வாலிபரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.

    எதற்காக கொடிய விஷமுள்ள இந்த பாம்புகள் இந்தியாவுக்கு கடத்தி வரப்பட்டது என்றும், இறந்த குரங்கு குட்டிகள் எதற்காக கொண்டு வரப்பட்டது என்றும் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும் வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் அவர்மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மேலும் உயிரோடு இருந்த பாம்புகள் அனைத்தும் ஹாங்காங்கிற்கே திருப்பி அனுப்பி வைக்கப்பட்டது. இறந்த நிலையில் இருந்த 6 குட்டி குரங்குகள் மட்டும் அப்புறப்படுத்தப்பட்டது. தொடர்ந்து அந்த வாலிபரிடம் சுங்க இலாகா துறையினர் மற்றும் கர்நாடக வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பயணி சூட்கேசில் விஷ பாம்புகள் கடத்தி வரப்பட்டதால் விமான நிலையமே பரபரப்பாக காணப்பட்டது.

    • பிரபாகரன்-அல்பினால் திருமணம் பிரபாகரனின் சொந்த ஊரான மதுக்கூரில் தமிழ் முறைப்படி நடந்தது.
    • அல்பினாலின் தந்தை இறந்து விட்டதால் தாயார், எங்கள் திருமணத்துக்கு சற்று யோசித்தார்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையை அடுத்த மதுக்கூர் அருகே உள்ள புலவஞ்சி கிழக்கு கிராமத்தைச் சேர்ந்தவர் பிரபாகரன்(வயது 33). டிப்ளமோ யோகா படிப்பு படித்துள்ள பிரபாகரன் கடந்த 10 ஆண்டுகளாக கஜகஸ்தானில் யோகா ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார்.

    இந்த நிலையில் பிரபாகரனிடம் யோகா கற்பதற்காக அந்த நாட்டை சேர்ந்த என்ஜினீயரான அல்பினால்(31) என்பவர் வந்துள்ளார். யோகா கற்க வந்த இடத்தில் அல்பினாலுக்கும், பிரபாகரனுக்கும் இடையே காதல் மலர்ந்தது.

    தங்கள் காதல் விவகாரத்தை மணமகள் வீட்டாரிடமும், தனது பெற்றோரிடமும் எடுத்துக்கூறிய பிரபாகரன், அல்பினாலை திருமணம் செய்து கொள்வதற்கு இருவரின் பெற்றோரிடமும் சம்மதம் கேட்டார். அதற்கு இரு வீட்டாரின் பெற்றோரும் சம்மதம் தெரிவித்தனர்.

    இதையடுத்து பிரபாகரன்-அல்பினால் திருமணம் பிரபாகரனின் சொந்த ஊரான மதுக்கூரில் நேற்று தமிழ் முறைப்படி நடந்தது. தமிழில் வேதமந்திரங்கள் முழங்க மணமகள் கழுத்தில் மணமகன் தாலி கட்டினார். மணமக்களை உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் வாழ்த்தினர்.

    இது குறித்து பிரபாகரன் கூறுகையில், நான் யோகா ஆசிரியராக கஜகஸ்தானில் பணியாற்றி வருகிறேன். என்னுடைய மாணவியாக அல்பினால் யோகா கற்க வந்தார். அவருக்கும் எனக்கும் 2 வயது தான் வித்தியாசம். அவர் என்ஜினீயராக வேலை பார்த்துக்கொண்டிருந்தபோது யோகா கற்க வந்தார். இந்த நிலையில் எங்கள் இருவருக்கும் காதல் மலர்ந்தது. இது குறித்து எனது பெற்றோரிடம் தெரிவித்தபோது அவர்கள் சம்மதம் தெரிவித்தனர்.

    அல்பினாலின் தந்தை இறந்து விட்டதால் தாயார், எங்கள் திருமணத்துக்கு சற்று யோசித்தார். பின்னர் அவரும் சம்மதம் தெரிவித்தார். இதனையடுத்து எனது சொந்த ஊரில் பெற்றோர் சம்மதத்துடன் எங்கள் இருவருக்கும் திருமணம் நடந்தது என்றார்.

    அல்பினால் கூறும்போது, எங்கள் நாட்டு கலாசாரத்தை விட தமிழ் கலாசாரமும், இங்குள்ள மக்கள் மற்றும் அவர்களது வாழ்க்கை முறை, இயற்கை சார்ந்த அமைப்புகளும் எனக்கு ரொம்பவே பிடித்துள்ளது. தமிழ் கொஞ்சம், கொஞ்சமாக கற்று வருகிறேன். கூடிய விரைவில் இங்குள்ள மக்களிடம் சகஜமாக தமிழ் பேசி நானும் ஒரு தமிழ் பெண்ணாக ஆகிவிடுவேன் என்றார்.

    • திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன்பு 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள், இளைஞர்கள் திரண்டனர்.
    • சமூக வலைதளங்களில் வீடியோவை பதிவிட்ட நபர் யாரென்று சைபர் க்ரைம் போலீசார் அடங்கிய தனிப்படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் அனுப்பர்பாளையம் திலகர் நகரில் உள்ள பனியன் நிறுவனத்தில் வேலைபார்க்கும் வடமாநில தொழிலாளர்கள் 100-க்கும் மேற்பட்டவர்கள், தமிழக வாலிபர் ஒருவரை பெல்ட், கட்டை, உள்ளிட்டவைகளை கொண்டு துரத்தி துரத்தி தாக்கும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து வேலம்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில் வடமாநில தொழிலாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள், இளைஞர்கள் திரண்டனர். அவர்கள் வடமாநில தொழிலாளர்களை முறைப்படுத்த வேண்டும். தமிழக இளைஞர்களுக்கு வேலை வழங்க வேண்டும் , தமிழக வாலிபரை தாக்கிய வடமாநில தொழிலாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி அனுப்பி வைத்தனர்.

    இந்நிலையில் தமிழக வாலிபரை, வடமாநில தொழிலாளர்கள் தாக்கியதாக சமூக வலைதளங்களில் உண்மைக்கு புறம்பாக தகவல்கள் பகிரப்பட்டு வருவதாகவும், வீடியோவை தவறாக சித்தரித்து வெளியிட்டுள்ளதாகவும் திருப்பூர் மாநகர போலீசார் விளக்கம் அளித்தனர். மேலும் வீடியோவை பகிர்ந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தனர்.

    மேலும் சமூக வலைதளங்களில் வீடியோவை பதிவிட்ட நபர் யாரென்று சைபர் க்ரைம் போலீசார் அடங்கிய தனிப்படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×